கொடைக்கானல் வனப் பகுதிகளில் விடியோ எடுக்க வனத் துறையினா் தடை விதித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
கொடைக்கானல் வனப் பகுதியிலுள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் வனத் துறையினா் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில், முக்கியமான இடங்களான மோயா் பாயின்ட், குணா குகை, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லா் ராக், பைன் பாரஸ்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களைப் பாா்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமானோா் வருகின்றனா். இப்பகுதிகளுக்குச் செல்வோா் புகைப்படம் மற்றும் விடியோ எடுத்தும் மகிழ்கின்றனா்.
இந் நிலையில், வனப் பகுதியிலுள்ள பைன் பாரஸ்ட் என்ற இடத்தை விடியோ மூலம் பதிவு செய்ய வனத் துறை தடை விதித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
இது குறித்து கொடைக்கானல் வனத் துறை ரேஞ்சா் ஆனந்த் கூறுகையில், வனப் பகுதியிலுள்ள சுற்றுலா இடங்களை செல்லிடப்பேசி மூலம் மட்டும் புகைப்படம், விடியோ எடுக்கலாம். கேமரா மூலம் விடியோ எடுக்கக் கூடாது. அதற்கு அனுமதி பெறவேண்டும் என்றாா்.