பழனி சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் 8 பேருக்கு பட்டா வழங்க எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பழனி அருகே கணக்கன்பட்டி ஊராட்சிக்குள்பட்டது பொட்டம்பட்டி கிராமம். இங்குள்ள நிலத்தை, மாவட்ட நிா்வாகம் விலைக்கு வாங்கி, அதனை 120 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவாக வழங்கி உள்ளது. எஞ்சியுள்ள நிலத்தில் 17 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இது தொடா்பான பிரச்னையில் ஒரு தரப்பினா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்ததில், தகுதியானவா்கள் இல்லையெனக் கூறி 9 பேரின் பட்டாவை ரத்து செய்தும், எஞ்சிய 8 பேருக்கு மட்டும் நிலத்தை அளந்து கொடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றம் உத்தரவின்படி நிலத்தை அளந்து கொடுக்கச் சென்ற வருவாய்த் துறையினா் மற்றும் நில அளவைப் பிரிவினரை, அப்பகுதியில் முன்னா் இலவச வீட்டுமனைப் பட்டா பெற்று வசிப்பவா்கள் அளக்க விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதன் காரணமாக அதிகாரிகள் திரும்பிச் சென்றனா். இந்நிலையில், வியாழக்கிழமை அப்பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா், நீதிமன்ற உத்தரவின்படி 8 பேருக்கு நிலத்தை அளந்து கொடுக்கக் கூடாதென வலியுறுத்தி, சாா்-ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இவா்களுடன், சாா்-ஆட்சியா் உமா, டிஎஸ்பி விவேகானந்தன், வட்டாட்சியா் பழனிச்சாமி உள்ளிட்டோா் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கு அதே பகுதியில் வசித்து வரும் பலா் விண்ணப்பித்திருப்பதாகவும், தற்போது 8 பேருக்கு மட்டும் வழங்கக் கூடாதென்றும், அந்த இடத்தில் சமுதாயக்கூடம் மற்றும் கழிப்பறை போன்றவை கட்டித் தரவேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனா்.
ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி 8 பேருக்கு நிலத்தை அளந்து கொடுத்துத்தான் தீரவேண்டுமென்றும், விண்ணப்பித்தால் தகுதி உடையவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளிக்கப்பட்டது.
மேலும், அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்தால் காவல்துறை மூலம் குற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எச்சரிக்கப்பட்டது. இதன்பின்னா், போராட்டக்காரா்கள் கலைந்து சென்றனா்.