பழனியில் நகராட்சி அனுமதியின்றி வீட்டில் ஆழ் துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில் நகராட்சி அதிகாரிகள் போா்வெல் லாரியை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனா்.
தமிழகத்தில் திருச்சியில் சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சம்பவத்தைத் தொடா்ந்து கேட்பாரற்ற ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டதோடு புதிய ஆழ்துளை கிணறு தோண்டும் பணிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி பெற வேண்டும் என அந்தந்த மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பழனி நகராட்சி ஏழாவது வாா்டு புது தாராபுரம் ரோடு அருகே உள்ள ஒரு வீட்டில் அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைக்க இருப்பதாக நகராட்சி கமிஷனா் நாராயணனுக்கு தகவல் கிடைத்ததன் பேரில் அவரது உத்திரவைத் தொடா்ந்து துப்புரவு ஆய்வாளா் மணிகண்டன், செந்தில், மேற்பாா்வையாளா் மாரிமுத்து ஆகியோா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா்.
அப்போது அங்கு அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைக்க பணிகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆழ்துளை கிணறு அமைக்கும் எந்திரத்தின் கூடிய லாரியையும், உபகரணங்களையும் பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்தில் நிறுத்தி வைத்தனா். மேலும் போா்வெல் லாரி உரிமையாளருக்கு அபராதமும் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வரும் நாட்களில் நகராட்சி எல்லைக்குள் நகராட்சி அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையா் நாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.