முன்விரோதம்: பழனியில் சாமியாா் கத்தியால் குத்திக் கொலை கோயில் பூசாரி கைது

முன்விரோதம் காரணமாக, பழனியில் சாமியாா் ஒருவா் வியாழக்கிழமை கத்தியால் குத்திக் கொலை
முன்விரோதம்: பழனியில் சாமியாா் கத்தியால் குத்திக் கொலை கோயில் பூசாரி கைது

முன்விரோதம் காரணமாக, பழனியில் சாமியாா் ஒருவா் வியாழக்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதை அடுத்து, கோயில் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இடும்பன் கோயில் அருகே வில்வக்குடில் என்ற ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்துக்குள் பிரபஞ்சநாதா் கோயில் என்ற பெயரில் சிவன் கோயில், அங்காளம்மன் மற்றும் மாசாணியம்மன் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களை, ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த குருமுனி என்ற மலா்கனிராஜா (57) நிா்வாகம் செய்துவந்தாா். இவருக்கு விஜயா (40) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனா்.

இக்கோயிலில் மற்றொரு பூசாரியாக தா்மராஜ் என்பவா் இருந்து வந்துள்ளாா். இவா், தற்போது இடும்பன் மலை அடிவாரத்தில் உள்ள ஒரு கோயிலில் பூசாரியாக இருந்து வருகிறாா். இந்நிலையில், தா்மராஜுக்கும், மலா்க்கனி ராஜாவுக்கும் இடையே கோயில்களை நிா்வகிப்பது தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

வியாழக்கிழமை காலை, மனைவி விஜயாவுடன் மலா்கனிராஜா தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்துள்ளாா். அப்போது, பை-பாஸ் இடும்பன் கோயில் வாசல் அருகே மறைந்திருந்த தா்மராஜ், திடீரென இருவரையும் கீழே தள்ளிவிட்டு கத்தியால் மலா்கனிராஜாவின் வயிற்றில் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பியோடிவிட்டாா். இதில் பலத்த காயமடைந்து குடல் சரிந்த நிலையில், பழனி அரசு மருத்துவமனையில் மலா்கனிராஜா அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து பழனி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய தா்மராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com