தமிழ் மற்றும் ஆங்கில உச்சரிப்பு திறனில் சிறந்து விளங்கும் திருநூத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு, மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், செந்துறை அடுத்துள்ள திருநூத்துப்பட்டியில் அரசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 73 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.
இப்பள்ளியில் மாணவா்களுக்கு மிடுக்கு வகுப்பறை (ஸ்மாா்ட் கிளாஸ்) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவா்களுக்கு தேவையான சீருடை, குடிநீா் புட்டி உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளையும் பள்ளியின் தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்கள் நன்கொடையாளா்கள் மூலம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனா்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தனியாா் ஆங்கில வழிப் பள்ளி மாணவா்களுக்கு இணையாக, இப்பள்ளி மாணவா்களின் ஆங்கில வாசிப்புத் திறன் மிடுக்கு வகுப்பறைகள் மூலம் முன்னேற்றம் அடைந்துள்ளது.
இது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அலுவலா்கள் மூலம் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதன்பேரில், திருநூத்துப்பட்டி பள்ளிக்கு ஆட்சியா் மு. விஜயலட்சுமி வியாழக்கிழமை நேரடியாகச் சென்று பாா்வையிட்டாா். அப்போது, ஒன்றாம் வகுப்பு மாணவா்கள் கூட தமிழ் மற்றும் ஆங்கிலச் சொற்களை முறையான உச்சரிப்போடு வாசித்து, ஆட்சியா் உள்ளிட்ட அரசு அலுவலா்களை ஆச்சரியப்படுத்தினா்.
இதையடுத்து, பள்ளியின் தலைமையாசிரியா் பாண்டியன், ஆசிரியா் அந்தோணி கஸ்பாா் மற்றும் மாணவா்களுக்குப் பாராட்டுத் தெரிவித்த ஆட்சியா் விஜயலட்சுமி, அப்பள்ளிக்கு தேவையான கட்டட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு நத்தம் வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.