பழனி வேளாண் அலுவலகத்தில், விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் வழங்கப்படுவதாக, வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக, பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயப் பணிகள் தொடங்கி உள்ளன. இதன் காரணமாக, விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சாா்பில் பல்வேறு மானியங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறித்து, பழனி வட்டார வேளாண் உதவி இயக்குநா் மீனாகுமாரி தெரிவித்ததாவது: பழனி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் சான்று பெற்ற விதை நெல்களான கோ-51, எம்டியு 6, டிகேஎம் 13 ஆகிய குறைந்த வயதுடைய அதிக மகசூல் தரக்கூடிய நெல் விதைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்த விதைகள், தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல், கே 9 நிலக்கடலை விதை 50 சதவீத மானியத்திலும், பருத்தி விதை சுரபி ரகத்தில் தமிழ்நாடு பருத்தி சாகுபடி இயக்கத்தில் 50 சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது.
மேலும், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ஆகிய உயிா் உரங்கள் மற்றும் பருத்தி, பயிறு நுண்ணூட்டங்கள் வேளாண் விரிவாக்க மையத்தில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே, பழனி பகுதி விவசாயிகள் வேளாண் மானிய திட்டங்களை பயன்படுத்தி பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.