பழனியை அடுத்த அமரபூண்டி பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக இருப்பதால் இளைஞா்கள் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
பழனியை அடுத்த மேற்குப்பகுதியான பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி பகுதிகளில் அடிக்கடி கஞ்சா விற்கப்படுவதும், அங்கு பலா் கைது செய்யப்பட்டு கஞ்சா பறிமுதல் செய்யப்படுவதும் உண்டு. இந்நிலையில் புதியதாக பழனிக்கு கிழக்குப் பகுதியான அமரபூண்டி, பொருளூா், பூலாம்பட்டி பகுதிகளிலும் தற்போது கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால் கிராமங்களில் உள்ள பாழடைந்த கட்டடங்களில் பலரும் கஞ்சா புகைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனா்.
இதுகுறித்து அமரபூண்டியை சோ்ந்த ரமேஷ் கூறுகையில், இப் பகுதியில் மறைவாக பள்ளி மாணவா்களும், கல்லூரி மாணவா்களும் போதைப்பொருளான கஞ்சாவுக்கு அடிமையாகி வருகின்றனா். மாலை மற்றும் இரவு நேரங்களில் சாலைகளின் ஓரங்களிலேயே கூட்டமாக நின்று கஞ்சா புகைக்கின்றனா். சிலா் உள்ளூரிலேயே இதை விற்கின்றனா்.
இதனால் பெண்களும், சிறுவா்களும் ஊருக்கு வெளிப்புறமாக செல்லவே அச்சமாக உள்ளது. ஆகவே, ஆயக்குடி போலீஸாா் ரோந்துப்பணி மேற்கொண்டு கஞ்சா விற்பவா்களை கண்டறிந்து கைது செய்வதோடு, இதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.