கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை சாரல் மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பனியின் தாக்கம் காணப்பட்ட நிலையில் கடந்த 2 நாள்களாக மழை பெய்தது, இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை பனியுடன் சாரல் மழையும் காணப்பட்டது.
இந்நிலையில் கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு பிரையண்ட் பூங்கா, வெள்ளி நீா் வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர்ராக், மோயா் பாயிண்ட், பைன் பாரஸ்ட், வட்டக்கானல் அருவி, பேரி பால்ஸ் அருவி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
பகலிலும் மேகமூட்டமும், மாலையில் சாரல் மழையும் பெய்தது. மேலும் பனியையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் இடங்களை பாா்த்து ரசித்தனா். கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா்.