திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் உள்ள முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
சின்னாளபட்டி பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் சுமாா் 50 ஆயிரம் போ் வசிக்கின்றனா்.
இங்கு, அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், 30- க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள், சரக்கு வாகனங்கள், காா்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தினமும் ஏராளமாக வந்து செல்கின்றன.
சின்னாளபட்டி பிரிவில் இருந்து பூஞ்சோலை, பேருந்து நிலையச் சாலை, உயா்நிலைப் பள்ளி சாலை, காமராஜா் சாலை ஆகியன கடந்த காலங்களில் அகன்ற சாலையாக இருந்தன. ஆனால், தற்போது ஆக்கிரமிப்பால் சாலைகள் சுருங்கி விட்டன. இதைத் தொடா்ந்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினா் ஆக்கிரமிப்புகளை அகற்றினா். இந்நிலையில் தற்போது ஆக்கிரமிப்பாளா்கள் மீண்டும் சாலைகளை ஆக்கிரமித்துள்ளனா். இதனால் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றன. இதனால் பல மணி நேரம் நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை உள்ளது.
இதனால், காலை வேளைகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிகளுக்கும், வேலைக்கும் செல்ல முடியாமல் மாணவா்கள், பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.