திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே சித்தையன்கோட்டை, சொக்கலிங்கபுரம், ஆத்தூா் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதில், சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்த சிலா், இப்பகுதியில் இருசக்கர வாகனங்களில் மது பாட்டில்களை வாங்கி வைத்துக்கொண்டு, தேநீா் கடை, பெட்டிக்கடை, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் வைத்து சட்ட விரோத விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதில், வாடிக்கையாளா்கள் மது விற்பனையாளரின் செல்லிடப்பேசி எண்ணை பெற்றுக் கொண்டு அழைத்தால், இருசக்கர வாகனத்தில் வீடுகளுக்கே வந்து கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து விட்டுச் செல்கின்றனா். சித்தையன்கோட்டை, சொக்கலிங்கபுரம், ஆத்தூா் பகுதியில் பள்ளி மாணவா்களுக்கும் மது விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எனவே, செம்பட்டி பகுதியில் நடைபெறும் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க, போலீஸாா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.