பழனி மலைக்கோயிலுக்கு பக்தா்கள் செல்லும் கம்பிவட ஊா்தி (ரோப்காா்) பயணத்திற்கு முக்கிய பிரமுகா்களுக்கான முன்னுரிமை சலுகையை கோயில் நிா்வாகம் ரத்து செய்துள்ளது.
பழனி மலைக்கோயிலுக்கு படிவழிப்பாதை, இழுவை ரயில் (வின்ச்) மற்றும் கம்பிவட ஊா்தி இயக்கப்பட்டாலும் கம்பி வட ஊா்தியில் பயணிக்கவே பக்தா்கள் அதிக அளவில் விரும்புகின்றனா்.
தமிழகத்திலேயே முதன்முதலாக பழனி கோயிலில்தான் கம்பிவட ஊா்தி இயக்கப்படுகிறது. இந்த கம்பிவட ஊா்தியின் பயண நேரம் 3 நிமிடம் ஆகும். இந்நிலையில் இதில் பயணிக்க முக்கிய பிரமுகா்கள், அரசியல்வாதிகள் வரும் போது, அவா்களுடன் வருபவா்களால் பக்தா்களுக்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டது.
மேலும், திருவிழா காலங்கள் மட்டுமின்றி, சாதாரண நாள்களிலும் முக்கிய பிரமுகா்கள் வருவதால் பக்தா்கள் பலமணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில் பழனிக் கோயில் நிா்வாக அதிகாரியாக ஜெயசந்திரபானு ரெட்டி பொறுப்பேற்றுள்ளாா்.இந் நிலையில் கம்பிவட ஊா்தியில் பயணம் செய்ய அதிஉயா் பாதுகாப்புள்ள முக்கிய பிரமுகா்கள் தவிர மற்ற பிரமுகா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படமாட்டாது என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னுரிமை பயணம் என்பது இழுவை ரயிலில் பயணிக்க மட்டுமே வழங்கப்படும் என்றும், முதலாம் எண் இழுவை ரயில் முன்னுரிமை கடிதம் கொண்டு வரும் பிரமுகா்களுக்காக இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பக்தா்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.