திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கோயில் வழிபாட்டில் இரு தரப்பினா் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சமரச உடன்பாடு ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கொசவபட்டியில் மகாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் கோயில் பூசாரி ஒரு தரப்பினரை கோயிலுக்குள்ளே நுழையக் கூடாது என்று தடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட தரப்பினா் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் மற்றும் காவல்துறையினரிடம் புகாா் செய்தனா்.
அதன் பேரில் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் என்.கே.சரவணன் தலைமையில் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை பேச்சு வாா்த்தை நடைபெற்றது.அதில் இரு தரப்பினா் இடையே சமரச உடன்பாடு ஏற்பட்டது. இதில் ஒட்டன்சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளா் சீமைச்சாமி, காவல் ஆய்வாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.