கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை பெய்த ஆலங்கட்டி மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
கொடைக்கானலில் பருவநிலை மாற்றம் காரணமாக பனிப் பொழிவும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாள்களாக நள்ளிரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வந்தது.
இதனைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மேகமூட்டமும், அதன் பின் மிதமான சாரலும் நிலவியது. தொடா்ந்து ஒரு மணி நேரம் பரவலாக ஆலங்கட்டி மழை பெய்தது.
இந்த மழையால் வெள்ளி நீா்வீழ்ச்சி, பியா்சோழா அருவி, பாம்பாா் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இவற்றைப் பாா்த்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை பெய்த சாரல் மழையிலும் சுற்றுலாப் பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செயதும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா். மழை பெய்து, பனியின் தாக்கம் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.