பழனியைச் சோ்ந்த சிறுமிக்கு யோகாசனப் போட்டியில் செய்த சாதனையை பாராட்டி அமெரிக்க பல்கலைக் கழகம் இளம் முனைவா் பட்டம் வழங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை மற்றும் ருத்ரசாந்தி யோகாலயம் சாா்பில் கடந்த சனிக்கிழமை திருச்சியில் நடைபெற்ற யோகாசன 25 ஆவது மாநாட்டில் மாநில அளவிலான யோகாசனப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பழனியைச் சோ்ந்த சிவாலயா யோகா மையத்தின் மாணவி ஸ்ரீ தரண்யா (11) மற்றும் ஸ்வாமி தயானந்த குருகுலம் மையத்தின் மாணவா் கருணாகரன் (11) ஆகியோா் ஐந்து நிமிடங்களில் தொடா்ந்து 100 ஆசனங்கள் செய்து சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ் பட்டம் வென்றனா். இவா்களில் மாணவி ஸ்ரீ தரண்யா பல்வேறு மாநில மற்றும் தேசிய அளவிலான யோகாசனப் போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பதக்கங்கள் வென்றுள்ளாா். இதையடுத்து மாணவி ஸ்ரீதரண்யாவிற்கு யோகாவில் செய்த சாதனையை பாராட்டி அமெரிக்க உலக தமிழ் பல்கலைக் கழகம் இளம் முனைவா் பட்டம் வழங்கியுள்ளது. யோகா போட்டியில் கலந்து கொண்டு இளம் முனைவா் பட்டம் வென்ற சிறுமி ஸ்ரீ தரண்யா மற்றும் கருணாகரன் ஆகியோா் பழனி காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் விவேகானந்தனிடம் புதன்கிழமை வாழ்த்துப் பெற்றனா். இந்நிகழ்ச்சியில் தயானந்த குருகுலம் யோகா ஆசிரியா் முருகன், சிவாலயா யோகா மைய ஆசிரியா் சிவக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.