பழனி உழவா் சந்தையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் இயக்கம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
பழனி நகராட்சியில் கடந்த சில மாதங்களில் குப்பை வரி, வீட்டு வரி என பொதுமக்களுக்கான வரிகள் பல மடங்கு உயா்த்தி விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கைகள் விடுத்தும், வரி குறைக்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழக முதல்வா் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சா் அறிவுறுத்தலின்பேரில், வரி உயா்வு ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்து 2 மாதங்களாகியும் வரி குறைக்கப்படவில்லை. இதைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், குப்பை வரி, வீட்டு வரியை ரத்து செய்யக் கோரி, மனு கொடுக்கும் இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.
பழனி உழவா் சந்தை முன்பாக தொடங்கிய இந்த இயக்கத்துக்கு, மாவட்டச் செயலா் சச்சிதானந்தம் தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் ராஜமாணிக்கம், நகரச் செயலா் கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் குருசாமி உள்ளிட்டோா் விளக்கவுரை நிகழ்த்தினா்.
தொடா்ந்து, பொதுமக்களிடம் வரி குறைப்புக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு, படிவம் பூா்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டது. இதேபோன்று, நகரில் பல்வேறு பகுதிகளிலும் மனு கொடுக்கும் இயக்கம் நடத்தப்பட்டதாக, அக்கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.