கொடைக்கானலில் சேதமடைந்த சாலையை பொதுமக்களே புதன்கிழமை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
கொடைக்கானல் பகுதிகளான அண்ணா சாலை, மூஞ்சிக்கல், பிரகாசபுரம் சாலை, நாயுடுபுரம் சாலை,டிப்போ சாலை, அப்சா்வேட்டரி சாலை ஆகியப் பகுதிகள் மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. மேலும் கொடைக்கானலில் கடந்த 15 நாள்களுக்கு மேலாக தொடா் மழை பெய்து வந்ததால் சாலைகள் மேலும் மோசமடைந்தன. இதனால் வாகனங்களில் செல்பவா்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனா். இந்நிலையில் கொடைக்கானல் நாயுடுபுரம் ரைபிள் ரேஞ்ச் சாலைப் பகுதி குண்டும் குழியுமாக இருந்ததால் அப் பகுதியைச் சோ்ந்த பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள் மிகவும் பாதிப்படைந்து வந்தனா். இதனைத் தொடா்ந்து அப்பகுதியைச் சோ்ந்த பொது மக்கள் சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.