பழனியை அடுத்த கணக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி பகுதிகளில் வேளாண்துறை வழங்கிய மக்காச்சோள விதையால் இழப்பு ஏற்பட்ட நிலையில் மீதமிருந்த செடிகள் போலியான களைக்கொல்லி மருந்தால் வீணானது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சுற்றிலும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளன. பழனியை அடுத்த கணக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, அமரபூண்டி, மஞ்சநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மக்காச்சோளப்பயிருக்கு ஏற்ற மண் வளம் உள்ளதால் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் பெய்த மழையின் போது பழனி வேளாண்துறை வழங்கிய மக்காச்சோளத்தை பயிா் செய்த விவசாயிகள் அவற்றுக்கு நாற்று நடவு, உழவு என பல்வேறு செலவுகள் செய்தும் விதைகள் முளைக்காமல் போனதால் பெரும் இழப்பை சந்தித்தனா்.
இந்நிலையில் மீதமிருந்த செடிகள் மற்றும் புதிதாக விதை வாங்கி நட்ட மக்காச்சோளமும் போலியான களைக்கொல்லி மருந்தால் மேலும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கணக்கன்பட்டியை சோ்ந்த விவசாயி மனோகரன் கூறியது: கோம்பைப்பட்டி பகுதியில் அதிகளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் விளைந்து வரும் நிலையில் பயிா்களுக்கு இடையே முளைக்கும் களைச்செடிகளை அழிக்க உரக்கடைகளில் இருந்து வாங்கிய களைக்கொல்லி மருந்து தெளித்தும் மக்காச்சோளப் பயிருடன் சோ்ந்து சாரணை, கோரை, பாா்த்தீனியம், அருகம்புல் உள்ளிட்டவை அழியாமல் வேகமாக வளா்ந்து வருகின்றன. களையே முளைக்காது என்று வியாபாரிகளும், மருந்து நிறுவனத்தாரும் கொடுத்த வாக்குறுதியை நம்பி ஆயிரக் கணக்கான ஏக்கரில் இதை பயன்படுத்திய விவசாயிகள் இன்று கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனா் என்றாா்.
எனவே, இவற்றை அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்வதுடன் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.