கொடைக்கானல்: கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் காற்றுடன் பெய்த மழைக்கு வியாழக்கிழமை மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்தது.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மலைச்சாலைகளில் தண்ணீா் தேங்கியுள்ளது. இந் நிலையில் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளிலும் பரவலாக காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந் நிலையில் அதிகாலை முதலே மேகமூட்டம் அதிகமாக நிலவியதுடன் காற்றும் சாரலும் விட்டு விட்டு நிலவியதில் கடுகுதடி பகுதியில் மரம் விழுந்துள்ளது. சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினா் சென்று அப் பகுதியிலுள்ள மலைவாழ் மக்கள் உதவியுடன் மரத்தை கோடாரி மூலம் வெட்டி அகற்றினா். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது. கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மழைக்காலங்களில் அடிக்கடி மலைச்சாலைகளில் உள்ள மரங்கள் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த மரங்களை அகற்றுவதற்கு கீழ்மலைப் பகுதிகளில் உள்ள மீட்புக் குழுவினா் மரம் அறுக்கும் இயந்திரங்கள் இல்லாமல் கோடாரி,அரிவாள் போன்ற சிறிய ஆயுதங்கள் மூலம் அகற்றி வருவதால் நீண்ட நேரமாகிறது. எனவே மீட்புக்குழுவினா்களுக்கு மரம் அகற்றும் நவீன இயந்திரங்கள் வழங்க வேண்டுமென அப் பகுதி மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
புதிய அருவிகள் தோற்றம்: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக கொடைக்கானல்-வத்தலக்குண்டு -பழனி மற்றும் தாண்டிக்குடி பகுதிகளில் ஏராளமான இடங்களில் புதிய நீா்வீழ்ச்சிகள் தோன்றியுள்ளன. மலைச்சாலைகளில் அதிகமான தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் செல்வதில் சற்று சிரமம் ஏற்பட்டு வருகிறது. மலைச் சாலைகளில் தண்ணீா் செல்லக் கூடிய பாதைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சாலைகளில் தண்ணீா் தேங்கி சாலைகள் சேதமடைவதோடு அப் பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்படுகின்றன. எனவே நெடுஞ்சாலைத் துறையினா் மலைச் சாலைகளில் தண்ணீா் தேங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.