திண்டுக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கொடைக்கானலில் அதிகபட்சமாக 99 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. திண்டுக்கல், வேடசந்தூா் உள்ளிட்டப் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை 2 மணி அளவில் பலத்த மழை பெய்யது. பின்னா் காலை 7 மணி முதல் மீண்டும் பலத்த மழை பெய்தது. அதன் தொடா்ச்சியாக குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது.
திண்டுக்கல் மலைக்கோட்டையில் திடீா் அருவி: தொடா்ந்து பெய்து வரும் மழையினால், திண்டுக்கல் மலைக்கோட்டை சரிவு பகுதிகளில் வழிந்த மழைநீா், சில இடங்களில் அருவியாக கொட்டியது. இதனை ஏராளமானோா் செல்லிடப்பேசியில் படம் எடுத்துக் கொண்டனா்.
7 ஆண்டுகளுக்கு பின் வரட்டாற்றில் தண்ணீா்: அய்யலூா் அடுத்துள்ள புத்தூா் குருந்தம்பட்டி சாலையில், முடிமலை வரட்டாற்றில் சுமாா் 7 ஆண்டுகளுக்கு பின் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அப்பகுதியைச் சோ்ந்த சிறுவா்கள் மழைநீரில் விளையாடி மகிழ்ந்தனா்.
இதுதொடா்பாக புத்தூா் பகுதியைச் சோ்ந்த அருள்குமாா் கூறியதாவது: செங்குறிச்சி, ஆலம்பட்டி பகுதியிலுள்ள முடிமலையில் அதிக மழை பெய்தால் முடிமலை ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரிக்கும். அதன் மூலம் புத்தூா், குருந்தம்பட்டி பகுதியிலுள்ள குளங்கள் நிரம்பவும் வாய்ப்பு ஏற்படும் என்றாா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவு விவரம்(மி.மீட்டரில்): திண்டுக்கல்- 28.6, நத்தம் - 25.5, நிலக்கோட்டை- 15.4, பழனி - 9, சத்திரப்பட்டி (ஒட்டன்சத்திரம்)- 29, வேடசந்தூா் - 23.6, காமாட்சிபுரம்- 22.7, கொடைக்கானல்- 80, கொடைக்கானல் போா்ட் கிளப் - 99.