கொடைக்கானலில் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த பிணவறை ஊழியர்: 3 செவிலியர்களிடம் விசாரணை

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் காயமடைந்தவருக்கு பிணவறை ஊழியர் சிகிச்சை அளித்த விடியோ

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் காயமடைந்தவருக்கு பிணவறை ஊழியர் சிகிச்சை அளித்த விடியோ புதன்கிழமை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பணியில் இருந்த 3 செவிலியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
  கொடைக்கானல் அருகேயுள்ள மூஞ்சிக்கல் பகுதியைச் சேர்ந்த ரபீக் (36) என்பவர் கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்துள்ளார். 
அப்போது 3 செவிலியர்கள் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், மருத்துவமனை பிணவறையில் சடலத்தை சுத்தம் செய்யும் பணியாளர் முனியாண்டி,  ரபீக்குக்கு சிகிச்சையளித்து இடது கையில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போட்டுள்ளார்.
 இந்த நிகழ்வு விடியோ எடுக்கப்பட்டு கட்செவி அஞ்சலில் பரவியது. இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி பாலாஜி, பணியில் இருந்த 3 செவிலியர்களிடம் புதன்கிழமை விசாரணை நடத்தினார். தொடர்ந்து 
3 பேருக்கும் விளக்கம் கேட்டு "மெமோ' கொடுத்த அவர், துறை ரீதியான நடவடிக்கைக்காக திண்டுக்கல் சுகாதார இணை இயக்குநருக்கு தகவல் அனுப்பியுள்ளார். இதனால் அரசு மருத்துவமனை ஊழியர்களிடையே அதிருப்தி நிலவுகிறது.
 அதிகாரி பாலாஜி கூறியதாவது: பிணவறை ஊழியர் முனியாண்டி என்பவர் காயமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பது போன்ற விடியோ வெளியான தகவல் புதன்கிழமை தெரியவந்தது. 
இது குறித்து பணியில் இருந்த 3 செவிலியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்காக  திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குநருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com