திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சிக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சேகரிக்க, பேட்டரி மூலம் இயங்கக்கூடிய ஆட்டோக்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் அகரம், ஆயக்குடி, தாடிக்கொம்பு, வடமதுரை, அய்யலூர், சின்னாளபட்டி, நிலக்கோட்டை, வத்தலகுண்டு, அம்மையநாயக்கனூர், நெய்காரப்பட்டி, கீரனூர், ஸ்ரீராமபுரம், கன்னிவாடி, சித்தையன்கோட்டை உள்ளிட்ட 23 பேரூராட்சிகள் உள்ளன. இந்தப் பேரூராட்சிகளில் சுயஉதவிக் குழு பெண்கள் மூலம் வீடுதோறும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு, வளமீட்பு பூங்காவுக்கு (உரக்கிடங்கு) கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு தரம் பிரித்து, மக்கும் குப்பைகளை கொண்டு மண்புழு உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பேரூராட்சிப் பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க பேட்டரி மூலம் இயங்கக்கூடிய ஆட்டோக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆட்டோவை 1 மணி நேரம் மின்சாரம் மூலம் சார்ஜ் ஏற்றினால், 10 கி.மீ. தொலைவு ஓடக்கூடியது.
சுமார் 3 மணி நேரம் சார்ஜ் ஏற்றினால், ஒரு நாள் முழுவதும் இந்த ஆட்டோக்களை சிரமமின்றி இயக்கலாம்.
தற்போது, சின்னாளபட்டி பேரூராட்சி வளாகத்தில் ஆட்டோக்களுக்கு பக்கவாட்டு தடுப்புகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.