திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில், ஊராட்சி, பேரூராட்சிப் பணியாளர்களுக்கு குடிநீரில் உரிய அளவில் குளோரின் கலப்பது, டெங்கு தடுப்பு, கொசுப் புழு ஒழிப்புப் பணிகள் குறித்த செயல்முறை பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
முகாம் தொடக்க விழாவுக்கு, ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா முன்னிலை வகித்தார். சுகாதாரத் துறை துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் வல்லபன், எவ்வாறு தண்ணீரைப் பாதுகாப்பாக விநியோகம் செய்வது என்பது குறித்து பேசினார். இதில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகன், சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், சரவணன், ஊராட்சி செயலர்கள், குடிநீர் தொட்டி இயக்குநர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில், சுகாதார ஆய்வாளர் சேகர் நன்றி கூறினார்.