திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் சாதனை புரிந்த சாரண இயக்க மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
சென்னையில் சில தினங்களுக்கு முன்பு மாநில அளவிலான சாரண, சாரணியர் பங்கேற்ற பெருந்திரள் அணிக்கூட்டம் மூன்று நாள்கள் நடைபெற்றது. இதில் வத்தலகுண்டு கல்வி மாவட்டம் சார்பாக 8 மாணவர்கள், 8 மாணவிகள் பங்கேற்றனர். குளோபுல் வில்லேஜ் கேம்ப், கலாசார ஊர்வலம், சாகச விளையாட்டுகள் ஆகியவற்றில் வத்தலக்குண்டு கல்வி மாவட்ட மாணவர்கள் முதலிலிடம் பெற்று பதக்கங்களை பெற்றனர். பதக்கங்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டும் விழா வத்தலகுண்டு அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டக் கல்வி அலுவலர் முனியாண்டி தலைமை வகித்து பரிசுகள் வழங்கினார். மாவட்ட சாரண ஆணையர் பிரசன்னா சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். மாவட்ட சாரண ஆணையர் மலர்விழி, மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் வழங்கினார்.
விழாவில் பாரத சாரண, சாரணியர் இயக்க துணை தலைவர்கள் சதீஸ்குமார், கயல்விழி, பர்ஸ்ட் ஸ்டெப் பள்ளி செயலாளரும், ரோட்டரி சங்க தலைவருமான கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பயிற்சி ஆணையர் நாச்சியார், மாவட்ட அமைப்பு ஆணையர் அகிலாதேவி ஆகியோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பாரத சாரண, சாரணியர் இயக்க மாவட்டச் செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். முடிவில் சாரண ஆசிரியை குழந்தைதெரசு நன்றி கூறினார்.