திண்டுக்கல் சாணார்பட்டி இடையே சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து வாகனங்களின் வேகத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறை ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பு செயலாளர் மு.முருகேசன் தெரிவித்துள்ளது: திண்டுக்கல் முதல் நத்தம் வரையிலான சாலை விரிவாக்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
முதல்கட்டமாக சாணார்பட்டி முதல் திண்டுக்கல் வரையிலும் சாலையின் ஒரு பகுதி விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த சாலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பயணிக்கின்றனர்.
சுமார் 15 மீட்டர் இடைவெளி வரையிலும் பள்ளம் தோண்டி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்ற குரும்பப்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியர் சக்திவேல், லாரி மோதிய விபத்தில் திங்கள்கிழமை உயிரிழந்துள்ளார்.
தற்போது மழை பெய்து வருவதால், பள்ளத்தில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு மேலும் சிரமம் ஏற்படும் சூழலும் உள்ளது. இதனால், சாலை விரிவாக்கப் பணிகள் முடிவடையும் வரையிலும் இலகுரக, கனரக வாகனங்கள் மட்டுமின்றி, இருசக்கர வாகனங்களையும் குறைவான வேகத்தில் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை கண்காணித்து ஒழுங்குப்படுத்தவற்கு, சாலை ரோந்துப் பணியை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.