பழந்தமிழர்களின் மரபணுக்கள் உலகம் முழுவதும் வியாபித்துள்ளன: மானுடவியல் வல்லுநர் டோமின் செமினல்

பண்டைய தமிழ் மக்களின் மரபணுக்கள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் உள்ள மக்களிடம் வியாபித்துள்ளதாக

பண்டைய தமிழ் மக்களின் மரபணுக்கள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் உள்ள மக்களிடம் வியாபித்துள்ளதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல மானுடவியல் வல்லுநர் டோமின் செமினல் தெரிவித்துள்ளார்.
 பிரான்ஸ் நாட்டை  சேர்ந்த  மானுடவியல் ஆய்வாளர் டோமின் செமினல் ஞாயிற்றுக்கிழமை பழனி வருகை தந்தார்.  இவர் மனித இனம் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறார்.  இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  தமிழகத்தில் கொடைக்கானல் பகுதியில் உள்ள பழங்குடி இனமக்கள் வசிக்கும் பகுதிகளில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார். 
இந்நிலையில் பழனியை அடுத்துள்ள இரவிமங்களம் பகுதியில் உள்ள கல்வட்டங்கள், பாப்பம்பட்டி பகுதியில் உள்ள பழங்கால குகை ஓவியங்கள், குதிரையாறு அணைப்பகுதியில் உள்ள பளியர் இன பழங்குடியின மக்கள், ஆயக்குடியில் முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டை குறித்து டோமின் செமினல் ஆய்வு செய்தார். அவருக்கு உதவியாக தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி விளக்கமளித்தார். 
பின்னர் செய்தியாளர்களிடம் டோமின் செமினல் தெரிவித்தது: கடல் ஆதிக்கத்தில் பழந் தமிழர்களே முன்னோடியாக இருந்ததற்கான ஆதாரங்கள் வலுவாக உள்ளன. 
தமிழர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் அனைவரும் தென்னிந்தியாவிற்கு மட்டுமே சொந்தமானவர்கள் என்பது தவறானது. அவர்கள் உலகம் முழுவதும் வியாபித்து இருந்துள்ளனர். ஐரோப்பியர்களின் வருகை இல்லாதிருந்தால் உலகத்தையே தமிழர்கள் தங்களது ஆளுமையின் கீழ் கொண்டு வந்திருப்பார்கள். 
எகிப்தியர்களின் உருவ அமைப்பு, தமிழர்களின் உருவ அமைப்புடன் ஒத்துப்போகிறது.  தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி போன்ற ஆடைகளையே, அவர்களும் அணிந்திருந்தனர். பண்டைய எகிப்தியர்கள் தமிழ் குடிகளாக இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.  கிரேக்க மன்னர் அலெக்சாண்டரின் படையெடுப்பு காரணமாக  பல அடையாளங்கள் அழிந்ததால், பழந்தமிழர்களின் மனிதப் பரவல் குறித்த விவரங்கள் தெரியாமல் போனது.
எகிப்தில் இறந்தவர்களின் உடலை பதப்படுத்த ஒருவகை எண்ணெய் பயன்படுத்தப்பட்டது.  அதற்கு தேவையான ஏலக்காய்களை தமிழர்கள் மூலமாகவே வர்த்தகம் நடந்துள்ளது.  இதன்மூலமே எகிப்தியர்களுக்கும், தமிழர்களுக்குமிடையே இருந்த வணிகத்தொடர்புகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் ஆஸ்திரேலியா, மலேசியா, ஜாவா, சமுத்திரா, இலங்கை, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் மக்களின் மரபணுக்கள், தமிழர்களின் மரபணுக்களுடன் ஒத்திருப்பது அறிவியல் ஆராய்ச்சிகளின்  மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. 
அதேபோல தென்ஆப்பிரிக்க பழங்குடிகளை போலவே, தமிழகத்தில் உள்ள பளியர் மற்றும் இருளர் இனப் பழங்குடிகளின் உருவ ஒற்றுமை உள்ளது.  இவர்களை பண்டைய தமிழர்கள் விவசாய பணிகளுக்காக அழைத்து வந்திருக்கலாம்.
மேலும் இந்த பழங்குடி இன மக்களின் மரபணுக்கள், ஆப்பிரிக்க நீக்ரோக்களின் மரபணுக்களுடன் ஒத்துப் போகின்றன. இவைகளின் மூலம் கடல் ஆதிகத்தில் பண்டைய தமிழர்கள் முன்னோடியாக இருந்துள்ளனர். ஐரோப்பிய மற்றும் கிரேக்க ஆதிக்கத்திற்கு முன்பு தமிழர்களின் ஆதிக்கம் உலகளவில் இருந்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com