எரியோடு அருகே வண்டல் மண் எடுப்பதில் அதிமுக மற்றும் திமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, திமுகவினர் காவல் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர், வடமதுரை, எரியோடு உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் வரட்டாறுகளில் அனுமதியின்றி மண் எடுப்பதாக தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எரியோடு அடுத்துள்ள பாகாநத்தம் கிராமக் குளத்தில் சிலர் வண்டல் மண் எடுக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை ஒன்றிய திமுக செயலர் சுப்பையா தலைமையில் அக்கட்சியினர் வண்டல் மண் எடுப்பதை நிறுத்தக் கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பாகாநத்தம் பகுதி அதிமுக ஊராட்சி செயலர் திரவியம், வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி பெற்றுள்ளதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த திமுகவினர், எரியோடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே இருதரப்பினர் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதால், இருதரப்பினரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால், காவல் நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.