ஒட்டன்சத்திரம் பகுதிகளில் திருட்டை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஏபிபி நகர் பகுதியில், கடந்த சில நாள்களாக தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இதனை முன்னிட்டு அப்பகுதியில்
காவல் துறையினர் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ஏபிபி நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளர் சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:
தெருக்களில் சிசிடிவி கேமரா பொருந்த வேண்டும். ஒவ்வொரு வீட்டின் முன்பும் இரவு முழுவதும் மின்விளக்குகளை எரிய விட வேண்டும். புதிதாக வரும் நபர்கள் குறித்து கண்காணிக்க வேண்டும். இதற்கு எல்லாம் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் ஏபிபி நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.