திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே வீட்டு மனைப் பட்டா வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்டடத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர்கள் சங்கத்தினர், மாநிலம் தழுவிய போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் பாலன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பழனியப்பன், துணைத் தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சந்தானம் சிறப்புரையாற்றினார்.
போராட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 3,700 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், விரைவில் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.
தமிழகம் முழுவதும் கட்டுமானம் மற்றும் பிற நல வாரியங்களில் 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் மணிகண்டன், ஏஐடியுசி கௌரவத் தலைவர் துரை சந்திரமோகன், ஏஐடியுசி சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலர் பிச்சைமணி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். போராட்டத்தில், ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். மாவட்ட துணைச் செயலர் சுப்பையா நன்றி கூறினார்.