போடி அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமில் புதுக்கோட்டை வேளாண்மை கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் புதுக்கோட்டை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த மாணவர்கள் போடியில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் தங்கி கிராமப்புற வேளாண்மை பணிகளை செய்து வருகின்றனர். இவர்களும், போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித்திட்டம் மாணவர்களும் இணைந்து போடி முந்தல் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முகாமுக்கு போடி கால்நடை மருத்துவமனை அறுவை சிகிச்சை மருத்துவர் செளந்தரராஜன் தலைமை வகித்தார். போடி மீனாட்சிபுரம் கால்நடை மருத்துவமனை மருத்துவர் குணசீலன் பங்கேற்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தார். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பரிசோதனை செய்து அவற்றின் உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கி மருந்து, சத்து மாத்திரைகள், தாது உப்பு கலவை போன்றவை வழங்கப்பட்டன.
போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் கருப்பையா வரவேற்றார். முகாமில் புதுக்கோட்டை வேளாண்மை கல்லூரி மாணவர்கள், நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்று ஏற்பாடுகளை செய்தனர்.