பழனியில் இருந்து திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு சுமார் பத்து டன் எடையிலான வண்ண மலர்கள் அனுப்பும் பணியை 17 ஆவது ஆண்டாக பழனி புஷ்ப கைங்கர்ய சபா சனிக்கிழமை தொடக்கியது.
பழனி மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் ஹரிஹரமுத்து தலைமை வகித்தார். செயலர் மருதசாமி முன்னிலை வகித்தார். பழனிக்கோயில் இணை ஆணையர் ஜெயசந்திரபானு ரெட்டி, துணை ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார் உள்ளிட்டோர் மலர்கள் அனுப்பும் பணியை தொடக்கி வைத்தனர்.
முதல்நாளான சனிக்கிழமை மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற செண்டுமல்லி, வாடாமல்லி, பட்டுப்பூ, மஞ்சள் மற்றும் வெள்ளை நிற சம்பங்கி உள்ளிட்ட மலர்கள் சுமார் 700 கிலோ அளவுக்கு கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து உபயமாக அனுப்பப்பட்டது. வரும் நாள்களில் தினமும் சுமார் 10 டன் எடையிலான தாமரை, அரளி, மருகு, மரிக்கொழுந்து, செண்டுமல்லி, பட்டுப்பூ, துளசி, தாமரை, வாடாமல்லி என பலவகையான மலர்கள் அனுப்பப்படவுள்ளன.
இதுகுறித்து தலைவர் ஹரிஹரமுத்து மற்றும் செயலர் மருதசாமி ஆகியோர் கூறியது: திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது சுவாமி புறப்பாடு, சுவாமி அலங்காரம், மலர் தோரணம் போன்ற நிகழ்ச்சிக்கு பல ஆயிரம் எடையிலான மலர்கள் தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவத்துக்கு முதல்நாளன்று மலர்கள் அனுப்பப்படும். முன்பு பழனியில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்தில் பூக்கள் கட்டணமின்றி கொண்டு செல்லப்படும்.
தற்போது அந்த பேருந்து இயக்கப்படாத நிலையில் திண்டுக்கல்லுக்கு பூக்கள் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து திருமலை
செல்லும் பேருந்தில் கட்டணமின்றி கொண்டு செல்லப்படுகிறது. ஆகவே, பழனியில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்தை ஆந்திர அரசு இயக்க வேண்டும் என்றனர்.
இச்சேவையில் பங்கேற்க விரும்புவோர் 94434-03026 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பூக்கள் அனுப்பலாம். நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளர் முருகேசன், நிர்வாகக் குழு உறுப்பினர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.