புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திண்டுக்கல் மலையடியவார சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில், புரட்டாசி 2ஆவது சனிக்கிழமையையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகத்திற்கு பின் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் உற்சவ மூர்த்திகளுக்கு காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல், தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை செளந்தரராஜப் பெருமாள் கோயில், சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
வெள்ளிக்கவச அலங்காரம்: ரெட்டியார்சத்திரம் அருகே, மலைமேல் அமைந்துள்ள கோபிநாத சுவாமி கோயிலில் மூலவர் கோபிநாதருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதணை நடைபெற்றது.
மூலவர் கோபிநாதர் மற்றும் தாயார் கோப்பம்மாள் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதேபோல் உற்சவருக்கு, நாள் முழுவதும் பாலபிஷேகம் செய்யப்பட்டது. ரெட்டியார்சத்திரம் கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில், மூலவர், வீரமகா ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. லட்சுமி ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார், ஸ்ரீ பைரவர், செங்கமலவல்லி தாயார், கருடாழ்வாருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
நத்தம்: கோவில்பட்டி ருக்மணி சத்தியபாமா சமேத வேணுராஜகோபாலசாமி கோயிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அனைத்து பெருமாள் கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
போடி: போடி ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு புஷ்ப அங்கி அலங்காரம் செய்யப்பட்டது. இதையொட்டி அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபட்டனர். பெருமாளுக்கு மங்கல பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் புஷ்ப அங்கி அலங்காரம் செய்து மகா தீபாராதணை நடத்தப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை கோயில் தலைமை அர்ச்சகர் சீனிவாச வரதன் மற்றும் கட்டளைதாரர்கள் செய்தனர்.
போடி ஜக்கமநாயக்கன்பட்டி போஸ்பஜார் ராமர் கோயிலில் நடைபெற்ற பூஜையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதே போல் போடி ஜக்கமநாயக்கன்பட்டி தொட்டராயசுவாமி ஒன்னம்மாள் கோயில், மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயசுவாமி ஒன்னம்மாள் கோயில், போடி-ரெங்கநாதபுரம் ஸ்ரீரெங்கநாதர் கோயில், தேவாரம் ரெங்கநாதசுவாமி கோவில் ஆகிய கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.