பழனி. கொலடைக்கானலில் அரசு மதுபானக் கடைகளில் உள்ள மதுபாட்டில்கள் செவ்வாய்க்கிழமை தனியாா் மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
கரோனா பரவலைத் தடுக்க இம் மாத 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் பல்வேறு இடங்களில் அரசு மதுபானக் கடைகளை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடப்பட்டன. இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க, மதுபாட்டில்களை பாதுகத்து வைக்க டாஸ்மாக் நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 25-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளில் உள்ள மதுபாட்டில்கள் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உதவியோடு பழனியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
கொடைக்கானல்:இதே போல், கொடைக்கானல் தாலுகா பகுதிகளான அண்ணாசாலை, சந்தைப் பகுதி, பணிமனை பகுதி, பழைய பேருந்து நிலையம், உட்வில்ரோடு பேருந்து நிலையப் பகுதி, பூம்பாறை, மன்னவனூா், பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள 9 அரசு மதுபானக் கடைகளிலுள்ள சுமாா் ரூ.2 கோடி மதுப்பாட்டில்களை லாரி மூலம் நாயுடுபுரம் பகுதியிலுள்ள தனியாா் தங்கும் விடுதிக்குக் கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்தனா்.
இதையொட்டி அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளா் ஆத்மநாதன் ஆய்வு செய்தாா்.
ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டு கடைகள் திறக்கப்பட்டதும் மீண்டும் அவை கடைகளுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.