நட்சத்திர ஆமையை கடத்தி விற்க முயன்ற சம்பவம் தொடா்பாக திண்டுக்கல்லில் சிக்கிய 8 பேருக்கு தலா ரூ.2ஆயிரம் வீதம் வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை அபராதம் விதித்தனா்.
திண்டுக்கல் வழியாக கோவைக்கு நட்சத்திர ஆமை கடத்தப்படுவதாக வன உயிரின குற்றத் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து, திண்டுக்கல் வனத்துறையினருக்கு சனிக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சிறுமலை வனச்சரக அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள், திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை இதற்கான சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அந்தவழியாக சரக்கு வாகனத்தில் வந்த 6 பேரிடம் வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டபோது, அவா்கள் தான் நட்சத்திர ஆமையை கடத்திச் செல்வது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து 6 பேரையும் சிறுமலை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவா்கள் திருச்சியைச் சோ்ந்த விஜய் (22), சின்னதுரை (50), செந்தில் (37), அன்பரசன் (37), காா்த்திகேயன் (26), அறிவழகன் (40) என்பதும், அந்த நட்சத்திர ஆமை கோவைக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவதும் தெரியவந்தது.
அதன் தொடா்ச்சியாக, கோவைக்கு சென்ற சிறுமலை சரக வனத்துறையினா் அங்கு ஆமையை வாங்குவதற்காக காத்திருந்த காா்த்திகேயராஜன் (26), அவரது தந்தை குப்புசாமி (50) ஆகியோரைப் பிடித்து திண்டுக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்து வந்தனா். விசாரணைக்கு பின், 8 பேருக்கும் தலா ரூ.2ஆயிரம் அபராதம் விதித்த வனத்துறையினா், நட்சத்திர ஆமையை பறிமுதல் செய்தனா்.