வாகனச் சோதனைக்காக கொடைக்கானல் சோதனைச் சாவடியில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.
கொடைக்கானல் கரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் பகுதிக்கு அன்றாட தினக் கூலி வேலைக்கு பெருமாள்மலை, பேத்துபாறை, வடகவுஞ்சி, அடுக்கம், பாலமலை, மச்சூர் போன்ற பகுதிகளிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதைத் தவிர கொடைக்கானலிருந்து தனியார் வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்த வாகனங்கள் அனைத்துமே நகராட்சி எல்லையான வெள்ளிநீர் வீழ்ச்சிப் பகுதியில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் காவலர்கள் சோதனை மேற்கொண்டு நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் வாகனங்களை பதிவு செய்து அனுமதித்து வருகின்றனர். ஆனால் சோதனைச் சாவடியில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக நிறுத்தி வைக்கப்படுவதால் அரசு மற்றும் தனியார் பணிகளுக்கு செல்பவர்கள் மிகுந்த பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
தற்போது மழைக்காலமாக இருப்பதால் மலைச் சாலைகளில் கொட்டும் மழையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. எனவே நகராட்சிக்கு சொந்தமான சோதனைச் சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு மட்டும் சோதனைச் சாவடியில் உள்ள அடைத்து வைக்கப்பட்டுள்ள மற்றொரு பாதையை பாதையை பயன்பாட்டிற்கு திறந்து வைத்து அப் பகுதியில் செல்லும் வாகனங்களை பதிவு செய்தால் பணிக்கு செல்பவர்கள் உரிய நேரத்தில் செல்வார்கள். மேலும் அப் பகுதியில் தேவையில்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது.
எனவே சோதனைச் சாவடியில் உள்ள மற்றொரு பாதையை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென்பது பொது மக்களின் கோரிக்கையாகும். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இ பாஸ் பெற்றுக் கொண்டு வாகனங்கள் மூலம் கொடைக்கானலுக்கு வருகின்றனர். ஆனால் வரும் வழியில் காட்ரோடு போலீஸ் செக்போஸ்டிலும், பழனி அடிவாரத்தில் உள்ள போலீஸ் செக்போஸ்டில் எப்படியோ அனுமதி பெற்று வருகின்றனர். இதில் ஒரு சில வாகனங்கள் செல்வதற்கு பல்வேறு காரணங்களால் கொடைக்கானலுக்கு செல்ல சோதனைச் சாவடியிலுள்ள வருவாய்த்துறை, மருத்துவத்துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள் மறுத்து வருகின்றனர்.
இதனால் தினமும் சுற்றுலாப் பயணிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந் நிலையில் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு அரசு இ பாஸ் எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. ஆனால் தேனி மாவட்டமான பெரியகுளம்,மஞ்சளாறு, தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து தினமும் மீன் வியாபாரி, பூ வியாபாரி என பலர் வந்து செல்கின்றனர். இவர்களை எப்படி சோதனைச் சாவடியிலுள்ள அதிகாரிகள் அனுமதிக்கின்றனர். இவர்களால் கொடைக்கானலில் கரோனா பாதிப்பு ஏற்படும் அச்சம் அபாயம் உள்ளது.
கொடைக்கானலில் உள்ளவர்கள் அருகிலுள்ள இடங்களுக்கு சென்று வருவதற்கு கடுமையான சோதனைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சோதனை, கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.