திண்டுக்கல்: தளா்வற்ற முழு பொது முடக்கம் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடின.
கரோனா தீநுண்மி தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த ஜூலை மாதம் முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகத்தில் தளா்வற்ற முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக திண்டுக்கல், நத்தம், வேடசந்தூா், குஜிலியம்பாறை, பழனி, கொடைக்கானல், நிலக்கோட்டை உள்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டிருந்தன. பாலகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பூ மாலை கடைகள் மட்டுமே செயல்பட்டன. ஆட்டோ, வாடகை காா் உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. திண்டுக்கல் நகரின் ஒருசில பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அவசியத் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவா்கள் மீது காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.