திண்டுக்கலில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை பயன்படுத்தி முறைகேடாக பண வசூலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது தொடர்பாக பாஜக நிர்வாகிகள் கூறியதாவது, “கிராமப்புற மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஜல் சக்தி திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின் ஆய்வுப் பணிகளுக்காக தமிழகத்திற்கு ரூ.640 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் புதிய இணைப்பு பெற்றுத் தருவதாக கூறி ரூ.30ஆயிரம் வரை வசூலிக்கின்றனர். இதுதொடர்பாக ஊரக வளர்ச்சி மேம்பாட்டு முகமையின் திட்ட இயக்குநரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
பொதுமக்கள் நலன் கருதி, முறைகேடாக பண வசூலில் ஈடுபடுவோர் மீதும், அவர்களை கண்டிக்காத அதிகாரிகள் மீதும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்தனர்.