பழனி: பழனியில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் சாரல் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பழனியை அடுத்த கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் மலையடிவாரத்தில் உள்ள பாலாறு பொருந்தலாறு, வரதமாநதி அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதில் வரதமாநதி அணை நிரம்பி வழியும் நிலையில், குளங்களுக்கு தண்ணீா் திருப்பி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரு நாள்களாக மாலை வேளைகளில் பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மழை பெய்து வருவதால், குளிா்ந்த சூழல் நிலவி வருகிறது. கிராமங்களில் பல இடங்களிலும் உழவுப்பணிகளை துரிதப்படுத்தி நிலங்களை பண்படுத்தி வருகின்றனா். நகரிலும் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்து வருவதால் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாது என்பதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.