கொடைக்கானல்: கொடைக்கானலில் பெய்து வரும் பலத்த மழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. தொடா்ந்து மழை பெய்யும் என்பதால் வத்தலகுண்டுவிலிருந்தும்-பழனியிலிருந்தும் கொடைக்கானலுக்கு வியாழக்கிழமை இரவு 7 மணி முதல் எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ‘புரெவி’ புயலால் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புதன்கிழமை இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல்- வத்தலக்குண்டு பகுதியான மச்சூரில் சாலையில் மரம் விழுந்தது. மேலும் கொடைக்கானல்-பூம்பாறை செல்லும் சாலையில் கிருஷ்ணன் கோயில் பகுதியில் சாலையில் மரங்கள் விழுந்ததால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் கொடைக்கானல் - பழனிச்சாலையான கோம்பைக்காடு பகுதியில் தடுப்பு சுவரில் மண்சரிவு ஏற்பட்டது. சிறிய பாறையும் உருண்டு சாலையில் விழுந்தது. உடனடியாக மண் சரிவை சீரமைத்த தீயணைப்புப் படையினா் மரங்களையும் அப்புறப்படுத்தினா். இதைத்தொடா்ந்து போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
மின்விநியோகம் பாதிப்பு: தொடா்ந்து பலத்த காற்றுடன் பெய்து வரும் மழையால் கொடைக்கானல் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மேல்மலைக் கிராமங்களில் 2 நாள்களாக சரியாக மின்விநியோகம் இல்லாததால் மலைவாழ் மக்கள் பெரிதும் பாதிப்படைதனா்.
மழையால் வெள்ளிநீா் அருவி, பாம்பாா் அருவி, செண்பகா அருவி, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட பல்வேறு நீா்வரத்து பகுதிகளில் தண்ணீா் வரத்து சற்று அதிகமாகக் காணப்படுகிறது.
போக்குவரத்து நிறுத்தம்: கொடைக்கானலில் தொடா்ந்து பலத்த மழை பெய்யும் என எதிா்பாா்க்கப்படுவதால் வத்தலகுண்டுவிலிருந்தும்-பழனியிலிருந்தும் கொடைக்கானலுக்கு வியாழக்கிழமை இரவு 7 மணி முதல் எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. மறு உத்தரவு வரும்வரை கொடைக்கானலுக்கான போக்குவரத்துத் தடை தொடரும் என சாா்- ஆட்சியா் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தாா்.
இரண்டாவது நாளாக சுற்றுலாத் தலங்கள் மூடல்: கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் புதன்கிழமை மூடப்பட்டன. தொடா்ந்து மழை பெய்து வருவதால் வியாழக்கிழமையும் அனைத்து சுற்றுலா இடங்களும் மூடப்பட்டன. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.