திண்டுக்கலில் தண்டுவடம் காயமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மனு அளிக்க வந்த தண்டுவடம் காயமடைந்தோா் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளா் ஜெ.ஜெயக்குமாா் கூறியதாவது: தண்டுவடம் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகள் விபத்துக்கு பின் மன ரீதியாகவும், பெருளாதார ரீதியாகவும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். எனவே தண்டுவடம் காயமடைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். ஆதிதிராவிடா் நலத்துறையின் மூலம் வழங்கப்படும் குடியிருப்புகள் போன்று, இடத்துடன் கட்டணமில்லா வீடு வழங்க வேண்டும். தண்டுவடம் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலி உபயோகிக்கும் வகையில் சாய்வுதளத்துடன் கூடிய கழிப்பறை கட்டிக் கொடுக்க வேண்டும். சுயதொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க வேண்டும் என்றாா்.