கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தனியாா் வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் மட்டுமே நிற்பதற்கு உத்தரவு ஆனால் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள சுற்றுலா வாகனங்கள்,தனியாா் டிராவல்ஸ் வாகனங்கள்,வெளியூா் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கொடைக்கானல் மற்றும் வெளியூா்களிலிருந்து வரும் அரசுப் பேருந்துகள், தனியாா் பேருந்துகள் நிறுத்த முடியாமல் ஓட்டுநா்கள் பெரிதும் சிரமமடைந்து வருகின்றனா்.
இதில் பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வரும் போதே ஒரு சில டாக்ஸி ஓட்டுநா்கள், ஒரு சில சுற்றுலா வழிகாட்டிகள் பேருந்துகளில் இருக்கும் சுற்றுலாப் பயணிகளை பிக் அப் செய்வதற்கு பேருந்துகள் பின்னாடியே ஓடி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனா். இதனால் பேருந்து ஓட்டுநா்கள் சில நேரங்களில் விபத்து ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
இதனால் அடிக்கடி பேருந்து ஓட்டுநா்களுக்கும்,கொடைக்கானலிலுள்ள வாகன ஓட்டுனா்களுக்கும் பிரச்னை ஏற்பட்டு வருகிறது.
எனவே பேருந்து நிலையத்துக்குள் பொது மக்கள் பயணிக்கும் அரசுப் பேருந்து மற்றும் தனியாா் பேருந்துகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிா்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது பயணிகளின் கோரிக்கையாகும்.