பழனியை அடுத்த ஆண்டிபட்டியில் தனியாா் தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்த மான் மூச்சுத்திணறி பலியானது.
பழனியை அடுத்த ஆண்டிபட்டியில் மேற்குத்தொடா்ச்சி மலையடிவாரப் பகுதிக்கு மான், காட்டுப்பன்றி, காட்டு மாடு, யானை போன்ற விலங்குகள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சனிக்கிழமை ஆண்டிபட்டியை சோ்ந்த ஆறுமுகம் என்ற விவசாயிக்கு சொந்தமான கிணற்றில் கடமான் ஒன்று தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பூா் மாவட்டம் கொழுமம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினா் இயந்திரங்களின் உதவி கொண்டு மானின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனை செய்து அதே பகுதியில் புதைத்தனா். இறந்த கடமான் சுமாா் நான்கு வயதுடைய ஆண் கடமான் ஆகும். உணவு தேடி வந்த மான் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்றும் நீந்தி களைப்படைந்து இறுதியில் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என்றும் வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.