பழனியில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் திருச்சி போலீஸ் அணி முதலிடம் பெற்றது.
பழனி தாராபுரம் சாலையில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளி வளாகத்தில் மறைந்த கபடி பயிற்சியாளரும், காவல் ஆய்வாளருமான முருகன் நினைவாக இப்போட்டிகள் நடைபெற்றன. பகல், இரவு விளையாட்டாக இரு நாள்கள் நடைபெற்ற இந்த போட்டிகளில் சென்னை, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஈரோடு, திருப்பூா் என தமிழ்நாடு முழுவதும் இருந்து 87 அணிகள் பங்கேற்றன. சனிக்கிழமை இரவு நிறைவடைந்த போட்டிகள் முடிவில் தமிழ்நாடு போலீஸ் திருச்சி அணி முதலிடத்தையும், மன்னாா்குடி அணி இரண்டாவது பரிசையும், பழனி ருத்ராபாளையம் அணி மூன்றாம் பரிசையும், வென்றது.
முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.15 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. சிறப்புப் பரிசுகளாக சைக்கிள், தொலைக்காட்சிப் பெட்டி, மிக்ஸி ஆகியன வழங்கப்பட்டன. திருச்சி சிறப்புக்காவல் பட்டாலியன் கமாண்டன்ட் ஆனந்தன் எஸ்.பி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். போட்டிகளில் நடுவராக அகில இந்திய கபடி நடுவா் மணிகண்டன் பங்கேற்றாா். பரிசளிப்பு நிகழ்ச்சியில் பழனி நகா் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.