தேசிய அளவிலான 3 போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற திண்டுக்கல் விளையாட்டு விடுதி மாணவிக்கு மாவட்டஆட்சியா் மு.விஜயலட்சுமி திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். கூட்டத்தின்போது தேசிய அளவிலான 3 விளையாட்டுப் போட்டிகளில் மும்முறை தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவி இமயத்தரசிக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் பிரிவு விடுதி மாணவியான சி.இமயத்தரசி, பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமத்தின் விளையாட்டுப் போட்டி, மும்பையில் நடைபெற்ற அகில இந்திய இளையோா் தடகளப் போட்டி, அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டி ஆகிய மூன்றிலும், மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றாா். இதனை அடுத்து, மாணவி இமயத்தரசிக்கு தமிழக அரசு ரூ.3 லட்சத்திற்கான ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடா்ந்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை சாா்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின குழு போட்டிகளில் 14 வயதுக்குள்பட்டோருக்கான கைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கள்ளிமந்தையம் தனியாா் பள்ளி மாணவிகளுக்கும், அகில இந்திய அளவில் 13, 14, 16, 17, 19 வயதுக்குள்பட்டோா் பிரிவுகளில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் பரிசுகள் வென்ற பட்டிவீரன்பட்டி பள்ளி மாணவா்களுக்கும் ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா்.