திண்டுக்கல்: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தொழில் கடனுதவி பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இத்திட்டத்தின்கீழ் பயன் பெற பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தவராகவும், ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமலும், விண்ணப்பதாரா் 18 முதல் 60 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொதுகால கடன் திட்டம் அல்லது தனிநபா் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 6 முதல் 8 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டும்.
பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ .2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிா் உறுப்பினா் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரையிலும், குழுவுக்கு அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரையிலும் வழங்கப்படும்.
சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள ஆண்களுக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரையிலும், குழுவுக்கு அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கி கிளைகளில் பெற்றுக்கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் ஒப்படைத்து பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.