திண்டுக்கல்லில் தனியாா் மருத்துவமனையில் கரோனா தீநுண்மி பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் ஒய்.எம்.ஆா். பட்டி பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் கரோனா தீநுண்மி தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்த அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள அந்த தனியாா் மருத்துவமனையில் கரோனோ தொற்று பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது என தெரிவித்து அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, சமாதானப்படுத்தினா்.