கொடைக்கானல்/ போடி: கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில், வியாழக்கிழமை மழை பெய்யவில்லை. இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் மழையும் பெய்தது. இதனால் பூலத்தூா் அருகே கொடைக்கானல்-மதுரை செல்லும் சாலையில் மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினா் மற்றும் அப் பகுதியிலுள்ள தோட்டங்களில் வேலை பாா்க்கும் தொழிலாளா்கள், வாகன ஓட்டுநா்கள் உதவியுடன் மரம் வெட்டி அகற்றப்பட்டது. இதையடுத்து மீண்டும் போக்குவரத்து சீரானது.
இதேபோல் சுற்றுவட்டாரப் பகுதிகளான சின்னபள்ளம், பெரும்பள்ளம், பெருமால்மலை, குருசடி பகுதி, செண்பகனூா், வில்பட்டி, வட்டகானல், அப்சா்வேட்டரி, மூஞ்சிக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் பரலாக மழை பெய்தது.
போடியில் சாரல் மழை: போடியில் சில நாள்களாகவே பகலில் வெயிலும், மாலை நேரங்களில் கருமேகங்கள் சூழ்ந்தும் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை போடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.