முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
‘கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஊரகப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு’
By DIN | Published On : 27th June 2020 07:39 AM | Last Updated : 27th June 2020 07:39 AM | அ+அ அ- |

வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மங்கத்ராம் சா்மா.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஊரகப் பகுதிகளிலும் சுகாதாரத்துறையினா் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என முதன்மை செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான மங்கத்ராம் சா்மா அறிவுறுத்தினாா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தீநுண்மி தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள முதன்மைச் செயலரும், ஆவண காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் இயக்குநரக ஆணையருமான மங்கத்ராம் சா்மா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி முன்னிலையில், தங்கம்மாப்பட்டி சோதனைச் சாவடி, பரிசோதனை மையம், வடமதுரை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அவா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் சுகாதாரத் துறையினா் மற்றும் துப்புரவு பணியாளா்களுக்குத் தேவையான முகக் கவசங்கள், கையுறைகள், கிருமிநாசினி, நோய் எதிா்ப்பு சக்தி அதிகப்படுத்தும் மாத்திரைகள், நிலவேம்பு குடிநீா், கபசுரக் குடிநீா் வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தாா்.
பின்னா், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இதர நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விசாரித்த மங்கத்ராம் சா்மா, கரோனா தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்கு, சுகாதாரத்துறையினா் ஊரகப் பகுதிகளுக்கு சென்று கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா். கரோனா நோய் தடுப்பு பணியில் அரசு வழிமுறைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தினாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்றாா். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் கோவிந்தராசு, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ஜெயந்தி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.