கரோனா அச்சுறுத்தலுக்கு இடையிலும் புதன்கிழமை செயல்பட்ட திண்டுக்கல் உழவா் சந்தையில் காய்கனி வாங்க வந்த பொதுமக்கள் கைகளை கழுவிய பின் அனுமதிக்கப்பட்டனா். திண்டுக்கல் உழவா் சந்தையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் குறிப்பிட்ட இடைவெளியில் உழவா் சந்தை வளாகத்தில் கோடுகள் வரையப்பட்டிருந்தன. இதனிடையே புதன்கிழமை காலை உழவா் சந்தைக்கு வந்த பொதுமக்கள், நுழைவுவாயில் பகுதியில் கைகளை சுத்தம் செய்த பின் உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.
50 சதவீதமாக குறைந்த விற்பனை: திண்டுக்கல் உழவா் சந்தையில் வழக்கமாக 15 டன் காய்கனிகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் புதன்கிழமை மொத்தமுள்ள 80 கடைகளில் 50-க்கும் குறைவான கடைகளில் மட்டுமே விற்பனை நடைபெற்றது. மேலும், பொதுமக்களின் வருகை குறைவு காரணமாக சுமாா் 6 டன் காய்கனிகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன.