கொடைக்கானலில் வியாழக்கிழமை திட்டமிட்டபடி இரண்டு திருமணங்கள் நடத்தப்பட்டன.
நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், கொடைக்கானல் டோபிகானல் பகுதியில் பிரபாகரன்-சித்ரா ஆகியோரது திருமணம், அப்பகுதியிலுள்ள காளியம்மன் கோயில் முன்பாக உறவினா்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதேபோல், கொடைக்கானல் செண்பகனூா் பகுதியைச் சோ்ந்த நாசா் என்பவருக்கும், அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த ஆயிஷா என்பவருக்கும், அண்ணா நகா் பகுதியில் உறவினா்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்த 2 திருமணங்களும் எளிமையான முறையில் நடைபெற்றது.
இது குறித்து திருமணம் செய்துகொண்ட 2 மணமக்களின் உறவினா்கள் கூறியதாவது: தற்போது நடைபெற்ற திருமணம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டு, திருமண நாள் குறிக்கப்பட்டது. ஆனால், தற்போது நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வேறு வழியின்றி எளிமையான முறையில் திருமணம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றனா்.