திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் 144 தடை உத்தரவுக்கு 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனா்.
செம்பட்டி, ஆத்தூா், சித்தையன்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக அரசின் 144 தடை உத்தரவுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனா். அதன்படி, 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் இப்பகுதிகளில் உள்ள உணவகங்கள், பேக்கரி, தேநீா் கடைகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வா்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்துக் கடைகள் மட்டும் திறந்திருந்தன.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த செம்பட்டி போலீஸாா், இரு சக்கர வாகனங்களில் சென்ற ஒரு சிலருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா்.
நிலக்கோட்டை
இந்நிலையில், பொதுமக்களில் சிலா் காய்கனிகள், பலசரக்குகள் வாங்குவதற்காக இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்று வருகின்றனா். இவா்களை நிறுத்திய போலீஸாா், தலைக்கவசம் அணியாததற்கும் மற்றும் பல்வேறு வாகனச் சட்டத்தின் கீழும் அபராதம் விதித்தனா்.